உக்ரைனிய ஆடு கூட ரஷ்யப் படைவீரர்களுக்கெதிராக போராடும் போலும்... ஒரு சுவாரஸ்ய நிகழ்வு
உக்ரைன் நாட்டு ஆடு ஒன்று செய்த செயலால், வெடிகுண்டு வெடித்து ரஷ்ய வீரர்கள் காயமடைந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உக்ரைன் வீரர்கள் மட்டுமல்ல, உக்ரைன் விலங்குகள் கூட ரஷ்யப் போர்வீரர்களை எதிர்த்துப் போரிடும் போலிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
ஆம், உக்ரைனிலுள்ள Zaporizhzhia என்ற இடத்தில் அமைந்துள்ள, Kinski Rozdory என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவமனையைச் சுற்றி கையெறிகுண்டுகளை அடுக்கி கண்ணி வெடி போல் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ரஷ்யர்கள். அதாவது யாராவது அந்த இடத்திற்குள் நுழைந்தால், தரையில் கண்ணுக்குத் தெரியாத வகையில் பொருத்தப்பட்டிருக்கும் மெல்லிய கம்பியில் கால்பட்டதும் குண்டுகள் வெடித்துவிடும்.
உக்ரைனியர்களுக்காக இந்த கண்ணிவெடியை உருவாக்கியுள்ளார்கள் ரஷ்யப் படைவீரர்கள், ஆனால், அதில் அவர்களே காயமடையும் ஒரு நிலையை, ஒரு உக்ரைன் ஆடு உருவாக்கிவிட்டது.
ஆம், பண்ணை ஒன்றிலிருந்து தப்பிய வெள்ளாடு ஒன்று, ஓடி வந்து ரஷ்யப் படைவீரர்கள் வைத்த கண்ணிவெடி வளையத்தைத் தட்டிவிட, வரிசையாக அந்த குண்டுகள் வெடிக்கத் துவங்கியுள்ளன.
இந்த சம்பவத்தில், 40 ரஷ்யப் படைவீரர்கள் காயமடைந்ததாக உக்ரைன் ஊடகம் ஒன்று, உக்ரைன் உளவுத்துறை இயக்குநரகத்தை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த ஆடும் உக்ரைன் இராணுவத்தின் இரகசிய உறுப்பினரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அந்த ஹீரோ ஆட்டின் நிலைமை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை!