அடுத்த ஐபிஎல் தொடரில் நானும், அவரும் டெல்லி அணியில் இருப்பது கஷ்டம்! ஒப்புக் கொண்ட அஸ்வின்
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு டெல்லி அணியில் தக்க வைக்கப்படுவது குறித்து, அந்தணியில் விளையாடி வரும் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில், அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இதனால் அனைத்து அணியிலும் இருக்கும் வீரர்கள் கலைக்கப்பட்டு, மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இருப்பினும் பழைய 8 அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அணியிலும் யார் எல்லாம் தக்கவைக்கப்படுவார்கள் என்ற கணிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில், டெல்லி அணிக்காக விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய யூ டியூப் சேனலில் இது குறித்து பேசியுள்ளார். அதில், தன்னைப் பொறுத்தவரை டெல்லி அணிக்காக ஷ்ரேயாஸ் அய்யரும், அதே போன்று நானும் தக்க வைக்க வாய்ப்பே இல்லை என்று நம்புவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதே சமயம் டெல்லி அணி, ரிஷப் பண்ட், ஆவேஷ்கான் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ரபாடா, நோர்க்கியா ஆகியோரை தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.