வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில்... புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ரிஷி போட்ட திட்டத்தால் பிரித்தானியாவுக்கே அடி!
வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழி உடைந்தாற்போல என்றொரு பழமொழி உண்டு...
அதேபோல, இப்போதுதான் வட அயர்லாந்து விடயத்தில் வெற்றிகரமாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி. தற்போது புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த போட்ட திட்டத்தால், அந்த புதிய வட அயர்லாந்து பிரெக்சிட் ஒப்பந்தமே ரத்து செய்யப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
வட அயர்லாந்து ஒப்பந்தத்தின் வெற்றி
பிரித்தானியாவின் இதர பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கும், வட அயர்லாந்திலிருந்து பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கும் மாமிசம் முதலான பொருட்களை அனுப்புவதில் ஏற்பட்ட பெரும் பிரச்சினைகள், சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி மேற்கொண்ட முயற்சியால் புதிய ஒப்பந்தம் ஒன்றிற்கு வழிவகுத்தது.
@getty
அதனால், பொருட்கள் போக்குவரத்துக்கான தடைகள் பெருமளவில் நீங்கி, நல்ல வர்த்தகம், அதன் மூலம் வருவாய்க்கும் வழி ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம்
ஆனால், அந்த ஒப்பந்தத்தை தன் முதல் வெற்றியாக அறிவித்த ரிஷி, அடுத்து கையில் எடுத்த பிரச்சினை சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல்.
சட்ட விரோதமாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்காக, அப்படி சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோர் ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பப்படுவதுடன், மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழையவோ, புகலிடம் கோரவோ அல்லது பின்னாட்களில் குடியுரிமை கோரவோ அனுமதி கிடையாது என கூறும் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரித்தானிய அரசு.
ஆனால், அப்படி செய்ய சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அனுமதிக்காது!
ஆகவே, புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியை மறுக்கவும் முடிவு செய்துள்ளது பிரித்தானியா. அதாவது, பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்படும் புலம்பெயர்வோர் மனித உரிமைகள் அடிப்படையில் கூட மீண்டும் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியாது.
Credit: Jack Hill
ஆனால், அப்படி பிரித்தானியா மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தை முழுவதுமாகவோ, அல்லது ஒரு பகுதியையோ மீறினால், ஐரோப்பிய ஒன்றியம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும். அது மீண்டும் எல்லை பிரச்சினைகள் உட்பட பிரித்தானியாவுக்கு பல பிரச்சினைகளை உருவாக்கும்.
அத்துடன், பிரித்தானியா மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தை முழுவதுமாகவோ, அல்லது ஒரு பகுதியையோ மீறினால் 2020ஆம் ஆண்டின் வர்த்தக மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுடனான ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளது.
ஆக, நீண்ட காலம் கஷ்டப்பட்டு ரிஷி செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம், இப்போது அவர் எடுக்க முடிவு செய்துள்ள புலம்பெயர்வோருக்கெதிரான நடவடிக்கைகளால் ரத்து செய்யப்படலாம் என்கிறார்கள் சட்டத்துறை நிபுணர்கள்.