காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி!
காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த துயரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், மருத்துவமனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது காசாவுக்கு தெற்கே உள்ள ஒரு சாலையில், அத்தியாவசிய உதவிகள் வரும் என எதிர்பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்தனர்.
நுசெய்ரத் அகதிகள் முகாமில் உள்ள அவ்லா மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் பலர் கொண்டு வரப்பட்டனர்.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சாட்சிகள், உதவி லொறிகள் நெருங்கும் போது மக்கள் முன்னேற முயன்ற போது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் 146 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக அவ்லா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 62 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்கள் மத்திய காசாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய நகரமான டெய்ர் அல்-பாலாஹ்வில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில், இதே சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |