மியான்மர் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் மூன்று ஆண்டு சிறை! மொத்தம் 23 ஆண்டுகள் தண்டனை
கடந்த டிசம்பர் மாதத்தில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கம் என ராணுவ எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்
மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவுஸ்திரேலிய பொருளாதார ஆலோசகர் சீன் டர்னெல் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையின் முடிவில், தனித்தனி வழக்குகளில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
AFP
இந்த நிலையில் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது முன்னாள் பொருளாதார ஆலோசகரான சீன டர்னெலுக்கும் அதே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சூகி மொத்தமாக 23 ஆண்டுகள் சிறை தண்டனையை பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சூகி மறுத்தார்.
AFP
எனினும், மியான்மர் நீதிமன்றங்கள் சுதந்திரமானவை, கைது செய்யப்பட்டவர்கள் உரிய நடைமுறைகளை பெறுகிறார்கள் என ராணுவ ஆட்சிக்குழு கூறியுள்ளது.