வளைகுடா நாடுகளுக்கு கண்காணிப்பு விமானம், ஏவுகணைகளை அனுப்பும் அவுஸ்திரேலியா
மத்திய கிழக்கில் ஈரானுடன் நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பு உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், E7A Wedgetail எனப்படும் நீண்டதூர கண்காணிப்பு விமானத்தையும், மேம்பட்ட AirtoAir ஏவுகணைகளையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, வளைகுடா வான்வெளியை பாதுகாக்கவும், ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக கூட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது.
115,000-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கில் வாழ்கின்றனர். அவர்களில் 24,000 பேர் அமீரகத்தில் (UAE) உள்ளனர். அவர்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என அல்பனீஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை முற்றிலும் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே, ஈரானுக்கு எதிராக நேரடி தாக்குதல் நடத்துவதற்கு அல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சியான கிரீன்ஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. "அமேரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் திட்டங்களில் அவுஸ்திரேலியா சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இது போர் நீட்சியாக மாறக்கூடும்" என எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியா, ஈரான் பெண்கள் கால்பந்து அணியின் 5 வீராங்கனைகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. அவர்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, வளைகுடா பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இருந்தாலும், அவுஸ்திரேலியாவின் பங்கு எதிர்காலத்தில் மேலும் விரிவடையக்கூடும் என்ற அச்சத்தை அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |