மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு!
மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஆஸ்திரியாவில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என அதிபர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் தெரிவித்துள்ளார்.
திங்கள் முதல் தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்படும் என்று ஷாலன்பெர்க் கூறினார்.
அதேபோபோல், 2022, பிப்ரவரி 1-ஆம் திகதி முதல் கோவிட்-19 தடுப்பூசிகளை கட்டாயமாக்க ஆஸ்திரிய அரசு திட்டமிட்டுள்ளது.
Photo: REUTERS/Leonhard Foeger
ஊரடங்கு விதிகளின்படி, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஷாப்பிங் மற்றும் உடற்பயிற்சி போன்ற சில விதிவிலக்குகளுடன் மக்கள் இனி தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஆஸ்திரியா ஏற்கனவே தடுப்பூசி போடப்படாத அல்லது சமீபத்தில் குணமடையாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தியது. அவ்வாறு செய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஆஸ்திரியா என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: REUTERS/Michaela Rehle
ஆனால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வியாழன் அன்று, கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கும் ஆஸ்திரியாவில் 15,000-க்கும் மேற்பட்ட புதிய கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய நாட்களில் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, மேலும் 66 சதவீத மக்கள் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன.
ஆஸ்திரியாவின் அண்டை நாடான ஹங்கேரி, வரும் சனிக்கிழமை முதல் வீட்டிற்குள் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: REUTERS/Leonhard Foeger