பிரித்தானியாவில் எரிசக்தி பயன்பாட்டை குறைக்க... நாளுக்கு 10 பவுண்டுகள் ஊக்கத்தொகை: புதிய திட்டம் அமுல்
இரவு நேரங்களில் மின் சாதனங்களை பயன்படுத்த பிரித்தானிய மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை, அவ்வாறான சூழல் உருவானால் வேறு வழியில்லை
பிரித்தானியாவில் மின் தேவை அதிகமிருக்கும் வேளைகளில், பயன்பாட்டை அளவாக முன்னெடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் புதிய திட்டம் அமுலுக்கு வர உள்ளது.
குறித்த திட்டத்தில் பயன்பெற தங்களை இணைத்துக் கொள்ளுமாறு பிரித்தானிய மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், குளிர்காலத்தில் மின் தேவை அதிகமல்லாத இரவு நேரங்களில் மின் சாதனங்களை பயன்படுத்த பிரித்தானிய மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
குளிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டால், நாளுக்கு மூன்று மணி நேரம் மின் தடை ஏற்படும் சூழல் உருவாகும் என National Grid ஏற்கனவே எச்சரித்துள்ளது. பெரும்பாலும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வாறான சூழல் உருவானால் வேறு வழியில்லை என்றே National Grid நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் புதிய திட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவர உள்ளனர். அதாவது, புதிய திட்டத்தில் இணைந்துகொள்ளும் குடும்பங்களுக்கு நாளுக்கு 10 பவுண்டுகள் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதனால் 2GW மின்சாரம் சேமிக்க முடியும் எனவும், இதனை 600,000 குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரம் வழங்கவும் பேருதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஊக்கத்தொகை திட்டமானது குடியிருப்புகளுக்கு மட்டுமின்றி, வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளனர். மேலும், smart meter பொருத்தப்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு எப்போது தங்கள் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்ற குறுந்தகவல் அனுப்பப்படும் என்றே தெரியவந்துள்ளது.