இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை - என்ன சாப்பிட வேண்டும்?
கடந்த சில நாள்களாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது.
இது, உடல் சோர்வு, மயக்கம், கண் எரிச்சல் என பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலையால் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பொதுமக்கள் வெப்ப அலை நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது என ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வெப்பத்தாக்கம் அறிகுறிகள்
அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருக்கும் போது அது உடலை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், ஏற்கனவே உடல் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், வெளிப்புறத்தில் பணி செய்பவர்கள் அடங்குவர்.

உடலால் தன்னைத்தானே சரியாகக் குளிர்விக்க முடியாதபோது வெப்பத்தாக்கம் ஏற்படுகிறது. இது வெப்பம் தொடர்பான மிகவும் கடுமையான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரைவாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வெப்பத்தாக்கம் மூளை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் தசைகளைச் சேதப்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.

தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, வாந்தி அல்லது குமட்டல், தசைப்பிடிப்புகள், அதிகப்படியான வியர்வை அல்லது வழக்கத்திற்கு மாறாக வறண்ட சருமம், வேகமான இதயத் துடிப்பு, குழப்பம் அல்லது திசைதிருப்பம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், மயக்கம், கடுமையான நேரங்களில் வலிப்பு போன்றவை ஏற்படுகிறது.
என்ன சாப்பிட வேண்டும்?
இந்த காலத்தில் தவறாமல் உடலுக்கு தேவையான நீரை அருந்த வேண்டும். குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

கோடை காலத்தில் செரிமானத்திற்கு உதவும் மோரை அருந்தலாம்.
இயற்கையான எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ள இளநீரை அருந்தலாம். குறிப்பாக வியர்த்த பிறகு நீரேற்ற அளவைப் பராமரிக்க உதவும்.

சிறுது உப்பு கலந்த எலுமிச்சை நீர், அதிக வெப்பத்தின் போது இழந்த திரவங்களை ஈடுசெய்ய உதவும்.
தர்பூசணி வெள்ளரிக்காய் முலாம்பழம் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள், தயிர், புதினா இலை காய்கறிகள் ஆகியவை உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடும்.
கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கோடைகாலங்களில் மந்தமாக உணரச்செய்யும் கனமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
செல்போன் மற்றும் கணினி திரையை அதிக நேரம் பார்க்கும் போது கண்ணில் உள்ள கண்ணீர் விரைவாக ஆவியாகி கண் சோர்வு. குறிப்பாக கோடை காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும்.
கண் சோர்வு மற்றும் வறட்சியைத் தடுக்க, 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, திரையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும்.
வெப்பநிலை அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை முடிந்தவரை வெளியே செல்வதை தவிருங்கள்.

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேர்ந்தால், புற ஊதாக்கதிர் (UV) பாதுகாப்பு கொண்ட சன் கிளாஸ் அணிய வேண்டும்.
தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள், தொப்பி அல்லது குடைகளைப் பயன்படுத்துங்கள், தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.
நீரிழப்பை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம். வெப்ப அலைகளின் போது ஏற்படும் மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று நீரிழப்பு ஆகும்.
வாய் வறட்சி, சோர்வு, சிறுநீர் கழித்தல் குறைவது, அடர் சிறுநீர், தலைவலி போன்றவை நீரிழப்பின் அறிகுறிகள் ஆகும்.
ஒருவர் வெப்ப தாக்கத்தால் மயக்கமடைந்தாலோ அல்லது தீவிர அறிகுறி தென்பட்டாலோ அவர்களை குளிர்ச்சியான அல்லது நிழலான இடத்திற்கு நகர்த்த வேண்டும்.
சுயநினைவுடன் இருந்தால் தண்ணீர் கொடுங்கள். இறுக்கமான ஆடைகளைத் தளர்த்தவும் உடலில் குளிர்ந்த துணியையோ அல்லது தண்ணீரையோ பயன்படுத்தவும்.
உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |