பிஞ்சு குழந்தை கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தாய்-தந்தை! இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் கதறி அழுத பரிதாப சம்பவம்
பிரேசிலில் குழந்தை கண்முன்னே தாய் மற்றும் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் Mato Grosso மாநிலத்தில் உள்ள Alto Garcas நகரில் கடந்த 8-ஆம் திகதி இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Nicolas Elias Albuquerque do Prado(18)-Cleidiana Pereira Alixandre(19) தம்பதில் சம்பவ தினத்தன்று தங்கள் குழந்தையுடன், Alto Araguaia நகரில் இருந்து Ato Garcas-வுக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர்.
அவர்கள் வீட்டை அடைந்தவுடன், காரில் இருந்து இறங்கிய போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்த தம்பதியை கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதனால் அந்த தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே துடி துடித்து உயிரிழந்தனர். அவர்களின் 10 மாத மகன் தன் பெற்றோர் உயிரிழந்துகிடப்பது தெரியாமல், அந்த இடத்திலே கதறி அழுதுள்ளான்.
இந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார் இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை மீட்டனர். அதன் பின் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசார், அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் நான் சரியாக அடையாளம் காணவில்லை என்று கூறியுள்ளார். சம்பவ இடத்தின் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதியினர் முன்பு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஏனெனில் Nicolas Elias Albuquerque do Prado மீது போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு குற்றவியல் வழக்கும், இரண்டு கொள்ளை தொடர்பிலும் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
Cleidiana Pereira Alixandre திருடப்பட்ட குற்றத்திற்காக பொலிசாரால் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இது போதை பொருள் கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, குழந்தை பாதுகாப்பு சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.