இரத்தவெள்ளத்தில் பெற்றோரின் சடலம்... 3 நாட்களாக தனித்து விடப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: பகீர் சம்பவம்
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் பெற்றோர் மற்றும் சகோதரனின் சடலங்களுடன் பிஞ்சு குழந்தைகள் இருவர் 3 நாட்கள் தனியே தத்தளித்த சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியது.
இந்த மிருகத்தனமான மூன்று படுகொலை சம்பவம் தொடர்பாக மாகாண பொலிசார் ஐவர் கும்பல் ஒன்றை கைது செய்தனர்.
சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட மூவரில் மைக்கேல் கோல்மன் என்பவரை பழி தீர்க்கவே, அந்த ஐவர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறியுள்ளது.
மைக்கேல் கோல்மன் உடன் அவரது துணைவி 34 வயதான ரேச்சல் ஓசுனா, இவரது 14 வயது மகன் கைரஸ் ஓசுனா ஆகியோரும் அந்த ஐவர் கும்பலிடம் சிக்கி கழுத்தறுபட்டு கொல்லப்பட்டனர்.
2019 மே 26ம் திகதி நடந்த இக்கொலை சம்பவத்தில் தற்போது மேலும் பல முக்கிய தரவுகளை பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான ரேச்சல், இரத்தவெள்ளத்தில் முகம் குப்புற படுத்தபடி கிடந்துள்ளார். இவரது 2 வயது பிள்ளை மிக மோசமான நிலையில் அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ரேச்சலின் பிறந்து சில மாதங்களேயான இன்னொரு பிஞ்சு குழந்தை அருகிலுள்ள ஒரு ஸ்விங்கிங் இருக்கையில் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சம்பவம் நடந்து 3 நாட்கள் வரை குழந்தைகள் இருவரும் சடலங்களுடன், கவனிக்க ஆளின்றி தத்தளித்துள்ளனர்.
மூன்று நாட்கள் பட்டினியால் அவதியுற்றுள்ளனர் ஆனால் அவர்கள் மீது சிறு காயம் கூட இருக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் தமது மகன் கைரஸ் தொடர்பில் நலம் விசாரிக்க சென்ற அவரது தந்தை பெஞ்சமின் ஜிமெனெஸ் என்பவரே, இந்த மிருகத்தனமான படுகொலையை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தமது மகன் கைரஸ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கழிவறைக்குள் இரத்தவெள்ளத்தில் கிடந்ததை பெஞ்சமின் கண்டுள்ளார்.
மே 26ம் திகதி படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
நண்பகல் நேரம் அந்த ஐவர் கும்பல் ரேச்சலின் குடியிருப்புக்குள் நுழைவதும், பின்னர் ஒரு மணி நேரத்தில் அவர்கள் வெளியேறுவதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில், கோல்மன் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதன் நோக்கம் போதைப்பொருள் தொடர்பானது என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மட்டுமின்றி, கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கோல்மன் ஒரு பெரிய அளவிலான கோகோயின் கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டியுள்ள அதிகாரிகள், அவர் தனது வீட்டில், 100,000 டொலர் தொகை வரை வைத்திருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐவர் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

