ஒலிம்பிக் பாட்மின்டன்: வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து.
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து உலகின் ‛நம்பர்-9' வீராங்கனையான சீனாவின் ஹி பிங் ஜியாவோ உடன் மோதினார்.
துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் ஜியாவோ சற்று சவால் கொடுத்தாலும், சிறப்பாக எதிர்கொண்ட சிந்து அந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில் 21-13, 21-15 என்ற நேர்செட்டில் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் சிந்து வெண்கலப் பதக்கத்துடன் இந்த ஒலிம்பிக்கை நிறைவு செய்தார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.