நாடாளுமன்றத்தில் புகுந்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்: வெளிநாடொன்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்
ஈராக்கில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கிய ஷியா தலைவர் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்களான நூற்றுக்கணக்கானோர் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஈரானிய ஆதரவு கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உச்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில், சம்பவத்தின் போது உறுப்பினர்கள் எவரும் காணப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
பாதுகாப்புப்படையினர் மட்டுமே அப்போது காணப்பட்டுள்ளனர், அவர்களும் சம்பவத்தின் தன்மை கருதி ஆர்ப்பாட்டக்காரர்களை நாடாளுமன்றத்தில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும் முன்னாள் மாகாண ஆளுநருமான முகமது ஷியா அல்-சுடானியின் வேட்புமனுவுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரானிய ஆதரவு கட்சிகளால் அவர் முன்னிறுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் மீதான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே, உச்ச பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அழைப்பு விடுத்துள்ளார். குறித்த பகுதியானது அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் குடியிருக்கும் வளாகமாகும்.
ஷியா தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சியானது கடந்த அக்டோபர் 2021ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 329 எண்ணிக்கையில் 73 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் அதன் பின்னர் புதிய அமைச்சரவை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
மட்டுமின்றி, அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் அல்-சதர் பங்குபெறாமல் ஒதுங்கிக்கொண்டார்.
கலவரங்களை ஒடுக்கும் பொலிசார் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.