இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டித்த வளைகுடா நாடு: தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு
இஸ்ரேல் - ஹமாஸ் போர் பாலஸ்தீன மக்களை கொத்தாக பலி வாங்கி வரும் நிலையில், இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது முக்கிய வளைகுடா நாடான பஹ்ரைன்.
பொருளாதார உறவுகளை
இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை மொத்தமாக நிறுத்துவதாக பஹ்ரைன் நாடாளுமன்றத்தின் கீழ்சபை வியாழக்கிழமை அறிவித்தது. அத்துடன் தங்கள் நாட்டுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும், தங்கள் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கவும் முடிவு செய்துள்ளது.
@getty
இஸ்ரேலுக்கான தூதர அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்துள்ளதை ஏற்கனவே பஹ்ரைன் உறுதி செய்திருந்தாலும், வர்த்தகம் தொடர்பில் தற்போது முடிவை அறிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், இது தொடர்பில் பஹ்ரைன் தரப்பில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த நடவடிக்கையானது பாலஸ்தீன விவகாரம் தொடர்பிலும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்துள்ளது.
வேடிக்கை பார்க்க முடியாது
இதனிடையே, காஸாவில் நடந்து வரும் அத்துமீறல் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என நாடாளுமன்றத்தின் முதல் துணை சபாநாயகர் அப்துல்நபி சல்மான் தெரிவித்துள்ளார்.
@getty
பஹ்ரைனும் இஸ்ரேலும் 2020 முதல் அமெரிக்க ஆதரவுடன் ஆபிரகாம் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.
அந்த உடன்படிக்கையின் கீழ், இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மொராக்கோவுடனும் உறவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |