பெலாரஸ் நாட்டு விமானங்களுக்கு மொத்தமாக தடை விதித்த 27 நாடுகள்
பெலாரஸ் நாட்டு விமானங்களுக்கு தடை விதித்துள்ள 27 ஐரோப்பிய நாடுகள், தங்கள் விமான நிலையங்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முன்னாள் சோவியத் நாடான பெலாரஸ் மீது இனி எந்த தனியார் விமானங்களும் பறக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பெலாரஸ் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பத்திரிகையாளரை பயணிகள் விமானத்தில் இருந்து மிரட்டி வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள சம்பவத்தில் ஐரோப்பிய நாடுகள் பெலாரஸ் மீது கடும் கோபத்தில் உள்ளன.
இதனையடுத்தே ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் சில தனியார் விமான சேவை நிறுவனங்கள், இந்த விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் அரசியலாக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.
Roman Protasevich என்ற 26 வயது பத்திரிகையாளர் கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியா செல்லும் வழியில் மே 23ம் திகதி பெலாரஸ் தலைநகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் பயணம் செய்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி, விமானத்தை வலுக்கட்டாயமாக பெலாரஸ் தலைநகரில் தரையிறக்கினர்.
தொடர்ந்து பத்திரிகையாளரும் அவரது காதலியும் பெலாரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.