பீதியை கிளப்பும் புதிய தொற்று... அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூடிய முதல் ஆசிய நாடு
உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடு omicron பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆசியாவில் முதல் நாடாக அதன் சர்வதேச எல்லைகளை மூடியுள்ளது ஜப்பான்.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் தொற்றானது தற்போது சர்வதேச நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பொஸ்வானா, இஸ்ரேல், ஹொங்ஹொங் மற்றும் அவுஸ்திரேலியாவில் குறித்த தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் (omicron) பரவலை எதிர்கொள்ள உலகின் முதல் நாடாக இஸ்ரேல் தனது சர்வதேச எல்லைகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது கிழக்காசிய நாடான ஜப்பான் தனது சர்வதேச எல்லைகளை மூடியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளிநாட்டுப் பயணிகள் எவரும் ஜப்பானுக்குள் நுழைய முடியாது. குறித்த புதிய கட்டுப்பாடானது செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானில் அமுலுக்கு வரும் என பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்திலேயே எல்லைகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் குறுகிய கால வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது தென்னாபிரிக்கா மற்றும் பிற எட்டு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான நுழைவுக் கட்டுப்பாடுகளை ஜப்பான் கடுமையாக்கியது, அவர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வசதிகளில் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேல், ஜப்பான் மட்டுமின்றி கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு பல நாடுகளில் பரவியுள்ளதை கண்டறிந்துள்ள பல நாடுகள் தற்போது தங்கள் எல்லைகளை மூடுவதற்கு ஆயத்தமாவதாக தகவல் வெளியாகிவருகிறது.