பெற்ற தாயிடம் 2 டொலருக்கு பிஞ்சு குழந்தையை இரவல் வாங்கிய பிச்சைக்காரர்: பின்னர் நடந்த கொடுமை
இந்தோனேசியாவில் பிச்சை எடுப்பதற்காக பிஞ்சு குழந்தையை பணத்திற்கு இரவல் அளித்த விவகாரத்தில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையானது வெள்ளி வர்ணம் பூசப்பட்டு பரபரப்பான சாலையில் பிச்சையெடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறந்து 10 மாதங்களேயான குழந்தையை வறுமை காரணமாக அந்த தாய் உள்ளூர் மதிப்பில் 20,000 rupiah தொகைக்கு இரவலாக அளித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டு கவனத்தை ஈர்க்க, சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவின் முக்கிய பகுதிகளில் பிச்சைக்காரர்கள் உடல் முழுவதும் சில்வர் வர்ணம் பூசிக்கொண்டு சிலை போன்று நடித்து பிச்சை எடுப்பது சமீப நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே மக்கள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியாவின் சமூக விவகார அமைச்சகம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது,
தாயும் குழந்தையும் தற்போது மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் வேலையின்மை கடந்த ஆண்டு 4.94 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு முதல் காலாண்டில் 6.26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியே முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 8.75 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர் மற்றும் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர், இது 2019 இல் 24.79 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.