இரண்டு வருட தடைக்கு பின்னர்... புதிய உத்தரவை வெளியிட்ட சீனா: கட்டுப்பாடுகளும் தளர்வு
கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட தடைக்குப் பிறகு சர்வதேச விமானங்களை சீனா அனுமதிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சர்வதேச பயணிகளுக்கான கண்காணிப்பு நாட்களை 7 என குறைத்துள்ளதுடன், எஞ்சிய 3 நாட்கள் குடியிருப்பிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அனுமதியளித்துள்ளனர்.
இந்தக் கொள்கையானது சீனாவை மற்ற நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் இணைக்கும் விமானங்களின் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா அமுலுக்கு கொண்டுவந்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 125 நாடுகளின் தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் தங்கள் நடவடிக்கைகளை இணையமூடாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
தற்போது, நீண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தமது கொரோனா கொள்கையில் தளர்வை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, இந்த வாரத்தில் இருந்தே சுமார் 2,025 விமானங்களின் சேவைகள் மீண்டும் துவக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச விமானங்களுக்கு சீனா தடை விதித்திருந்ததால், 23,000 இந்திய மாணவர்கள் சீனாவுக்கு திரும்ப முடியாமல் சொந்த ஊர்களில் சிக்கிக்கொண்டனர்.
ஆனால், படிப்பைத் தொடர உடனடியாக நாடு திரும்ப விரும்புவோரின் பெயர்களை சீனா நாடியதை அடுத்து இந்தியா பல நூறு மாணவர்களின் பட்டியலைச் சமர்ப்பித்தது.
தற்போது, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் கடந்த சில வாரங்களாக அனுமதி பெற்ற விமானங்களில் சீனாவுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உட்பட அண்டை நாடுகளில் உள்ள பல நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளையே சீனா அனுமதித்துள்ளது.