இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் வாடகை கொலையாளியா? விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
போர் சூழல் மிகுந்த லிபியாவில் வாடகை கொலையாளியாக செயல்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் குதிரைப்படை அதிகாரி
பிரித்தானிய ராணுவத்தின் முன்னாள் குதிரைப்படை அதிகாரியான ஜாக் மான் என்பவரே மால்டா பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். லிபியாவில் மருத்துவ ரீதியான பயிற்சி அளிக்க சென்றதாக ஜாக் மான் கூறியுள்ளதை மால்டா அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜாக் மான் புறப்பட தயாரான குறிப்பிட்ட தனியார் விமானத்தின் எஞ்சிய பயணிகளிடம் இது தொடர்பில் மால்டா பொலிசார் விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
@shutterstock
வட ஆப்பிரிக்க நாட்டுக்கு அந்த தனியார் விமானம் புறப்படும் முன்னர் ஜாக் மான் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதலே லிபியா உள்நாட்டு கலவரங்களால் துண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரித்தானிய மக்கள் லிபியாவுக்கு பயணிப்பதை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பரிந்துரைப்பதில்லை. மட்டுமின்றி, லிபியாவில் பிரித்தானிய நிறுவனங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரி- மேகனின் நெட்ஃபிளிக்ஸ் தொடரிலும்
இளவரசர் ஹரிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான ஜாக் மான், சமீபத்திய ஹரி- மேகனின் நெட்ஃபிளிக்ஸ் தொடரிலும் தோன்றினார். ஜாக் மானின் தந்தை 2004ல் எக்குவடோரியல் கினியா அரசாங்கத்திற்கு எதிராக வாடகை கொலையாளியாக செயல்பட்டவர், இதனால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.
எக்குவடோரியல் கினியா அரசாங்கத்திற்கு எதிரான விவகாரத்தில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சரின் மகன் மார்க் தாட்சரும் நிதியுதவி அளித்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
@netflix
ஜாக் மான் பிரித்தானிய ராணுவத்தில் செயல்படும்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2015ல் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார்.
இதற்கு முன்னர் லிபியாவில் பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனத்திலும் ஜாக் மான் பணியாற்றியுள்ளார். தற்போது ஜாக் மான் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உட்பட்ட ஒரு குழுவினரையே, மால்டா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஐந்து நாட்களுக்குள் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் எனவும், லிபியாவில் தங்கள் நிறுவனம் பயிற்சி அளிப்பதில் தடை ஏதும் இல்லை என்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜாக் மான் தெரிவித்துள்ளார்.