ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்த நிலையில் கடத்தப்பட இருந்த வீராங்கனை மீது பகீர் குற்றச்சாட்டு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்த நிலையில் திடீரென பெலாரஸ் அதிகாரிகளால் கடத்தப்பட இருந்த வீராங்கனை ஒருவர் ஜப்பான் அதிகாரிகளிடம் உதவி கோரி கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை பெலாரஸ் நாடு சுமத்தியுள்ளது.
Krystsina Tsimanouskaya (24) பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. 200 மீற்றர் பந்தயத்தில் பங்கேற்க காத்திருந்த அவரை திடீரென 4x400 ரிலே ஓட தயாராகுமாறு அவரது பயிற்சியாளர் வற்புறுத்தியிருக்கிறார்.
அப்படி அவர் 200 மீற்றர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும், அவரது வேலை பறிக்கப்படும் என்றும், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவரது பயிற்சியாளர் எச்சரித்துள்ளார்.
இந்த விடயங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட Krystsina, தனது அணியை விமர்சித்துள்ளார்.
வேறு வழியில்லாமல் ஒரு வழியாக 4x400 ரிலே ஓட Krystsina சம்மதித்த நிலையில், விளையாட்டுப் போட்டி துவங்க சிறிது நேரமே இருக்கும் நிலையில், உடனடியாக நாட்டுக்குத் திரும்ப தயாராகுமாறு அவருக்கு உத்தரவு வந்துள்ளது. இது விளையாட்டுத்துறையின் உத்தரவு அல்ல, உயர் மட்ட உத்தரவு என்று Krystsinaவிடம் கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர்.
விடயம் என்னவென்றால், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenko, Krystsinaவைக் குறிவைத்துள்ளதாகவும், அவரைக் கடத்தி நாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் Krystsinaவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாய்நாட்டுக்குத் திரும்பினால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை புரிந்துகொண்ட Krystsina, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னை பெலாரஸுக்கு அனுப்பவேண்டாம் என ஜப்பான் பொலிசாரிடம் கண்ணீருடன் மன்றாட, உடனடியாக அவரை அவர்கள் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டார்கள்.
தற்போது, போலந்து நாடு Krystsinaவுக்கு மனிதநேய அடிப்படையில் புகலிடம் தர முன்வந்துள்ளது. புதன்கிழமை போலந்துக்கு புறப்படும் Krystsina, அங்கு சென்று புகலிடம் கோரி விண்ணப்பிக்க இருக்கிறார்.
இதற்கிடையில், மனைவி குறித்த தகவல் வெளியானதும், Krystsinaவின் கணவரான Arseni Zhdanevichம் பெலாரஸிலிருந்து தப்பி உக்ரைனுக்கு ஓடி விட்டார். அவர் விரைவில் தன் மனைவியுடன் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால், சிக்கல் முடியவில்லை. காரணம், Krystsinaவின் பெற்றோர் பெலாரஸ் நாட்டில்தான் இருக்கிறார்கள். ஏற்கனவே பெலாரஸ் அதிகாரிகள் Krystsinaவின் தாயாரை தொடர்புகொண்டு அவர் மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது, Krystsina வெளிநாட்டு உளவாளி என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ள பெலாரஸ் அதிகாரிகள், உடனே அவர் நாடு திரும்பியாகவேண்டும் என Krystsinaவின் தாயாரை மிரட்டியிருக்கிறார்கள்.
Krystsinaவும் அவரது கணவரும் தப்பிவிட்டாலும், Krystsinaவின் பெற்றோருக்கு சிக்கல்தான் என்கிறார்கள் பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenkoவை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்.
இந்த Alexander Lukashenkoதான், தன்னை விமர்சிப்பவரான பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக நடுவானில் பயணிகள் விமானம் ஒன்றைக் கடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.