இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி
பென் டக்கெட் போதையில் இருப்பது போல் தோன்றும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் குரல் கொடுத்துள்ளார்.
வீரர்களின் குற்றச்சாட்டு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடருக்காக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி நாளை தொடங்கும் 4வது டெஸ்டில் விளையாட உள்ளது.
இதற்கிடையில், இரண்டாவது மற்றும் 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில், இங்கிலாந்து அணி நூசாவில் எடுத்த இடைவேளை சில வீரர்களின் அதிகப்படியான மது அருந்தலுக்கு வழிவகுத்த ஒரு பேச்சிலர் பார்ட்டி என்று கூறப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ் ஆதரவு
இந்த நிலையில், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சக அணி வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அவர் வைரலான சமூக ஊடகப் பதிவு மற்றும் பேச்சிலர் பார்ட்டி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டோக்ஸ், "இந்தத் தருணத்தை நான் எப்படி கையாள்கிறேன் என்பதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள அனைவரின் நலனும், ஒருவேளை சில குறிப்பிட்ட தனிநபர்களின் நலனும் கூட, இங்கிலாந்து கேப்டனாக எனக்கு இப்போது மிகவும் முக்கியமானது.
கேப்டனாக எனது பங்கு, என்னால் முடிந்தவரை என் வீரர்களைப் பாதுகாப்பதாகும். இந்தப் பயணத்தில் நாங்கள் சாதிக்க வேண்டிய ஒரு இலக்கு இன்னும் இருக்கிறது. இது நாங்கள் திட்டமிட்டபடி துளியும் நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "என் வீரர்களை கவனித்துக் கொள்வதுதான் இதில் இருந்து நான் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றாகும். ஏனென்றால், நாங்கள் களத்தில் இறங்கி இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.
பென் டக்கெட் போதையில் இருப்பது போல் தோன்றும் ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரித்து வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |