யு டர்ன் அடித்த இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.
கடிதத்தை வாபஸ் பெறுவதற்கான தனது முடிவை பானுகா ராஜபக்ச கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) செயலாளர் மோகன் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி, பானுக ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த தனது முடிவை எழுத்து மூலம் SLC-க்கு அறிவித்தார்.
SLC அறிமுகப்படுத்திய சமீபத்திய உடற்தகுதி தரங்களுடன், குறிப்பாக ஸ்கின்ஃபோல்ட் அளவுகளுடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அவர் கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.
30 வயதான பானுக ராஜபக்ச, தனது தோல் மடிப்பு நிலைகளை மேலும் குறைக்கும் பட்சத்தில், அவரால் பந்தை பலமாக தாக்க முடியாது என்று நம்புவதாகக் கூறினார்.
அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்கா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இளம் கிரிக்கெட் வீரரை தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இளம் கிரிக்கட் வீரரிடம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பானுகா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நேற்று (12) Temple Trees-ல் இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பானுகா தனது ஓய்வுக் கடிதத்தை திரும்பப் பெறுவதுடன், SLC-ன் உடற்தகுதி சோதனைகளின் தரத்தை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022ல் திட்டமிடப்பட்டுள்ள அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக உடற்தகுதி சோதனைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.