புடின்- ஜோ பைடன் சந்திப்பு: வெளியான முக்கிய பின்னணி தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னெடுக்கும் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் தலைப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்துவரும் பைடன் - புடின் சந்திப்பானது புதன்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.
உள்ளூர் நேரப்படி 4.22 மணியளவில் ஜோ பைடன் சுவிஸ் சென்று சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சிறப்பு மிக்க இந்த உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும், அவர்களுடன் பங்கேற்கும் அதிகாரிகளும் விவாதிக்க இருக்கும் தலைப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக இருவரும் விவாதிக்க உள்ளனர்.
ரஷ்யாவில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள், சிறை தண்டனைகள் பற்றியும் இந்த சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம், பொருளாதார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள், தகவல் பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டம், காலநிலை மாற்றம் மற்றும் ஆர்க்டிக் ஆகியவற்றை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பொதுவாக விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி சிறைவாசம் அனுபவிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி குறித்தும் அமெரிக்கா தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம்.
மேலும், மத்திய கிழக்கில் தற்போதைய சூழல், சிரியா, லிபியா, ஈரானிய அணுசக்தி திட்டம், ஆப்கானிஸ்தான், கொரிய தீபகற்பம் உள்ளிட்டவைகளும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த உச்சி மாநாடானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, உரிய அதிகாரிகள் குழுவும், முக்கிய தலைவர்கள் இருவரும் தனித்தனியாக விவாதிக்க உள்ளனர்.
இதற்கு முன்பாக, கடந்த 1985ம் ஆண்டு பனிப்போர் காலத்தில், அன்றைய சோவியத் ரஷ்யாவின் தலைவர் கார்பச்சேவ்வுடன், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன், ஜெனீவா நகரில் முதல் முறையாக உச்சி மாநாட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.