பெரிதும் கொண்டாடப்பட்ட ஜோ பைடனின் உரையை தயாரித்தவர் இவரா? குவியும் பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜோ பைடன் ஆற்றிய உரையை தயாரித்த இந்திய வம்சாவளி அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜனவரி 20, புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்றார்.
அதனையடுத்து, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். ஜனநாயகத்தின் முக்கியத்துவம், இன பேதத்தை ஒழிப்பது, ஒற்றுமையாக வாழ்வது, நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்வது என, அவரது உரை புதுமையாகவும், மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.
ஜோ பைடனின் இந்த பேச்சு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்த உரையை தயாரித்துள்ள இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வினய் ரெட்டிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒபாமா ஆட்சி காலத்தில் ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோதும், அவரது உரையைத் தயாரிக்கும் தலைமை அதிகாரியாக வினய் பணியாற்றியுள்ளார்.
மட்டுமின்றி, ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போதும், ஜோ பைடன் மற்றும் தற்போது துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கும், வினய் ரெட்டிதான் உரைகளை தயாரித்து தந்துள்ளார்.
வினய், மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், ஓஹியோவில் சட்டப் படிப்பும் முடித்துள்ளார். தற்போது நியூயார்க்கில், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.