இந்தியா மீது போர் தொடுப்போம் - நதி நீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
நீர் தராவிட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, இந்தியா ரத்து செய்தது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை நடத்தியது.
இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவியது. அடுத்து சில நாட்களில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
சமீபத்தில், சிந்து நீதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சிந்து நீதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது திரும்பப்பெற மாட்டாது" என தெரிவித்தார்.
பிலாவல் பூட்டோ
இந்தியா சிந்து நதி நீரை தர மறுத்தால் பாகிஸ்தான் போர் தொடுக்கும் என பிலாவல் பூட்டோ எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ, "இந்தியாவுக்கு 2 வாய்ப்புகள் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது அல்லது சிந்து நதிப் படுகையில் உள்ள 6 ஆறுகளில் இருந்தும் தண்ணீரை எடுத்துகொள்வோம்.
சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது சட்டவிரோதமாகும். ஏனெனில், இது 2 நாடுகள் தொடர்புடையது. இந்தியா நீரை நிறுத்துவது ஐநா ஒப்பந்தத்திற்கு எதிரானது. இந்தியா முறையாக தண்ணீரை திறந்துவிடவில்லை என்றால் அவர்கள் மீது போர் தொடுப்போம்.
பாகிஸ்தானை சர்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (FDAF) கருப்புப் பட்டியலில் சேர்த்துவிட வேண்டும் என்று சர்வதேச அளவில் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதன் நீர் தேவைகளுக்கு பெருமளவில், சிந்து நதியை நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |