கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வரும்: பில் கேட்ஸ் வெளிப்படை
கொரோனா பெருந்தொற்றின் கடுமையான கட்டம் 2022ல் முடிவுக்கு வரும் என உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும் தடுப்பூசி ஆர்வலருமான பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும் தற்போது உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள Omicron மாறுபாட்டின் பரவல் தொடர்பிலும் பில் கேட்ஸ் தமது கவலையை பதிவு செய்துள்ளார்.
பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில், கொரோனா பெருந்தொற்று தொடர்பில் மற்றொரு கணிப்பு பதிவு செய்வது என்பது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் தொற்றுநோயின் கடுமையான கட்டம் 2022 ல் முடிவடையும் என்று நான் நினைக்கிறேன் என அதில் பதிவு செய்துள்ளார்.
மேலும், தடுப்பூசிகள் பரவலாக பல நாடுகளில் வழங்கப்பட்டு வந்தாலும், 2020ல் பதிவான கொரோனா இறப்புகளை விடவும் 2021ல் அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதாக பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, தமது வாழ்க்கையில் மிக மோசமான அல்லது மறக்க முடியாத ஆண்டாகவும் 2021 மாறிப்போனதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று தொடர்பில் பலபேர்கள் தம்மீது சந்தேகம் கொண்டுள்ளதையும் மறைமுகமாக பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது உலக நாடுகளை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள Omicron மாறுபாடு தொடர்பில் தமது கவலையை பதிவு செய்துள்ள பில் கேட்ஸ், உலக நாடுகள் கண்டிப்பாக பெருந்தொர்றுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் பெரும்பாலும் அறிகுறிகள் லேசானவை மற்றும் கவலை கொள்ளத் தேவை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.