பீதியை ஏற்படுத்தும் உயிரியல் ஆயுத ஆய்வகங்கள்... எந்த நாடுகளில் அதிகம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
உயிரியல் ஆயுதங்கள் மற்றும் அதன் ஆய்வகங்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், தவறான ஒரு சோதனை முயற்சி இன்னொரு பெருந்தொற்றை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரியல் ஆய்வகங்களில் சோதனை
உலகின் மிக மிக ஆபத்தான கிருமிகளை பல நாடுகளில் செயல்படும் உயிரியல் ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு வருவது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இது, வல்லரசு நாடுகள் தங்கள் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆபத்தான உயிரியல் ஆயுத போட்டியில் களமிறங்கியதே காரணம் என கூறப்படுகிறது.
உலகின் 27 நாடுகளில் ஆபத்தான உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது என்பதை லண்டனின் கிங்ஸ் கல்லூரி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
மேலும், 2021ம் ஆண்டிற்கு பிறகு 10 புதிய உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளது, அல்லது கட்டுமானத்தில் உள்ளது, அல்லது திட்டமிடப்பட்டு வருகிறது என்பதையும் கிங்ஸ் கல்லூரி வெளிப்படுத்தியுள்ளது.
27 நாடுகளில் அமைந்துள்ள 69 ஆய்வகங்களில் மிக மிக ஆபத்தான கிருமிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 51 ஆய்வகங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. 15 ஆய்வகங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது, 3 ஆய்வகங்கள் கட்டுமானப்பணியில் உள்ளது.
கொரொனா பெருந்தொற்று இதுபோன்ற ஒரு உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என்ற கேள்வி உலக மக்களை உலுக்கி வரும் நிலையில், 9 நாடுகள் மொத்தம் 12 உயிரியல் ஆய்வகங்களை புதிதாக நிறுவ ஆயத்தமாகியுள்ளது, அதுவும் கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் பரவி, நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடையும் நிலையில்.
அதிகரித்த எண்ணிக்கை
2002ல் அமெரிக்கா உயிரியல் ஆயுத ஆய்வகம் ஒன்றை நிறுவிய பின்னர் தான், இதன் எண்ணிக்கை பல நாடுகளில் அதிகரித்துள்ளது என்பதையும் நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@EPA
அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் ரஷ்யாவும் களமிறங்கியது. தற்போது இந்த மூன்று நாடுகள் உட்பட 27 நாடுகளில் ஆபத்தான உயிரியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் மட்டும் 26 உயிரியல் ஆய்வகங்கள் செயல்படுகின்றதாக கிங்ஸ் கல்லூரி பட்டியலிட்டுள்ளது. இதில் ஒரு ஆய்வகம் பிரித்தானியாவில் செயல்படுவதாகவும் ஒரு ஆய்வகம் ஸ்பெயின் நாட்டில் நிறுவ திட்டமிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியாவில் 20 ஆய்வகங்கள் செயல்படுவதில், 11 சீனாவிலும், எஞ்சியவை இந்தியா, கஜகஸ்தான், தைவான், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் திட்டமிடப்பட்டு வருகிறது.
வட அமெரிக்காவில் 15 ஆய்வகங்கள் செயற்பாட்டில் உள்ளது. அமெரிக்காவில் ஒரு ஆய்வகம் கட்டுமானப்பணியில் உள்ளது, கனடாவிலும் அமெரிக்காவிலும் இரண்டு ஆய்வகங்கள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில் மிக ஆபத்தான நான்கு ஆய்வகங்கள் உள்ளன. அவை நான்கும் தற்போதும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.