கொரோனா தடுப்பூசிக்கு பிறகு திடீர் உதிரப்போக்கு: கடும் அவதிக்குள்ளான லண்டன் தாயார்
லண்டன் தாயார் ஒருவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் தமக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் பகுதியை சேர்ந்த ஜாக்குலின் கோல்ட்ஸ்வொர்த்தி என்பவரே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் தமக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இது புற்றுநோய் அல்லது வேறு ஏதாவது தீவிரமான வியாதியாக இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அவர் உடனடியாக மருத்துவமனையை நாடியுள்ளார். ஆனால் மாதவிடாய் நின்றுபோய் 20 ஆண்டுகள் ஆன 57 வயதுடைய அவருக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
சமூக சேவகியான ஜாக்குலின் கோல்ட்ஸ்வொர்த்தி கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளார். இதன் பின்னரே தமக்கு உதிரப்போக்கு ஏற்பட்டதாகவும் அவர் நம்புகிறார்.
ஆனால் லண்டன் மருத்துவர்கள் இதற்கு வாய்ப்பில்லை என்றே கூறியுள்ளனர். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கைவிட அதிகமாக இருந்தது எனவும், சுமார் ஒருவார காலம் நீடித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மார்ச் மாதம் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் தமக்கு உதிரப்போக்கு மீண்டும் ஏற்படவே இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே மாதவிடாய் நின்றுபோன தாய்மார்களில் 366 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளதை உத்தியோகப்பூர்வ தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், கொரோனா தடுப்பூசியால் அவர்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவ கண்காணிப்பு குழு ஏற்க மறுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மாதவிடாய் நின்று போனவர்களுக்கு திடீரென்று உதிரப்போக்கு ஏற்படுவது முற்றிலும் தற்செயலானவை மற்றும் தடுப்பூசி இல்லாமல் கூட இது நடந்திருக்கும் என்பது முற்றிலும் சாத்தியம் என மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட சுமார் 35,000 பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது தொடர்பிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.