வரலாற்றில் முதல்முறையாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய தனியார் விண்கலம்
அமெரிக்காவின் தனியார் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
நிலவில் ஆய்வு
உலகின் பல நாடுகள் நிலவை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக பல விண்கலங்கள் ஆய்விற்காக நிலவை சுற்றிவரவும், தரையிறங்கி ஆய்வு செய்யவும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த பரிசோதனை முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் வெற்றிபெற்றுள்ளன.
அதே சமயம் தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரி 15ஆம் திகதி, டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் விண்கலம் ஒன்றை அனுப்பியது.
எலோன் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் புளூ கோஸ்ட் என்ற விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக தரையிறங்கிய விண்கலம்
இந்த நிலையில், நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை பயர்பிளை நிறுவனம் உறுதி செய்தது. அதில் "நாம் நிலவில் இருக்கிறோம்" எனவும், லேண்டரின் செயல்பாடு சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் அரசு விண்வெளி நிறுவனங்களே திணறும் நிலையில், தனியார் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |