30,000 பேர் படுகொலைக்கு காரணமானவன்... கொடூர கூட்டத்திற்கு தலைவன்: உடல் சிதறி பலி
மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான போகோ ஹராம் குழுவின் தலைவன் எதிரணிக்கு பயந்து தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளான்.
ஐ.எஸ் ஆதரவு இயக்கமான போகோ ஹராமின் தலைவன் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டுள்ளதை, இன்னொரு இயக்கத்தின் ஒடியோ பதிவு ஒன்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மே 18ல் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாகவும், குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரண்டு பயங்கரவாத குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில், எதிரணிகளிடம் சிக்காமல் இருக்க அபுபக்கர் ஷெகாவ் தாமே வெடிகுண்டை இயக்க வைத்து மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அரசாங்க அதிகாரி ஒருவர் பகிர்ந்த நைஜீரிய உளவுத்துறை அறிக்கையிலும், போகோ ஹராம் தொழில்நுட்ப குழுவும் செகாவ் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் பல கட்டங்களில் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. நைஜீரிய ராணுவமும் ஒருமுறை அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டு, பின்னர் மறுப்பு தெரிவித்தது.
கடந்த 2014ல் Chibok நகரில் இருந்து 270 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்ற நிலையிலேயே போகோ ஹராம் உலக நாடுகளின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியது.
இதில் பலர் விடுவிக்கப்பட்டாலும், நூற்றுக்கணக்கான மாணவிகள் இன்னும் மாயமாகியுள்ளனர். சில மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
போகோ ஹராம் அமைப்பை கடந்த 2009ல் இருந்தே அபுபக்கர் ஷெகாவ் தலைமையேற்று நடத்தி வருகிறார். வடகிழக்கு நைஜீரியா முழுவதும் கொலை, முழு அளவிலான கிளர்ச்சி, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் போகோ ஹராம் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை சுமார் 30,000 மக்கள் போகோ ஹராம் குழுவினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.