விமானத்தில் வெடிகுண்டு புரளியின் பின்னணியில் ஒரு இந்திய வம்சாவளி சிறுவன்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
ஸ்பெயின் நாட்டில் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனிலிருந்து ஸ்பெயின் தீவான Menorca தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
உடனடியாக சீறிப் பாய்ந்த போர் விமானங்கள் இரண்டு அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்க, பயணிகள் வெளியேற்றப்பட்டு, உடைமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
ஆனால், அந்த வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.
இந்நிலையில், பெரும் பரபரப்பையும், தேவையில்லாத பணச் செலவையும், அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு இந்திய வம்சாவளி சிறுவன் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆதித்யா வர்மா (Aditya Verma, 18) என்ற அந்த பதின்ம வயதுச் சிறுவன், மருத்துவரான தனது தாயுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறான், நன்றாகப் படிக்கக்கூடிய அந்தச் சிறுவன், ஒரு செஸ் இளம் மேதையும் கூட. உலகப் புகழ் பெற்ற செஸ் சாம்பியன் Garry Kasparov கையால் அவன் விருது வாங்கியிருக்கிறான்.
ஸ்பெயின் தீவான Menorcan தலைநகர் Mahonஇலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஆதித்யா, தான் ஒரு ஆசிய வம்சாவளியினர் என்பதாலும், தனது தோலின் நிறத்தாலும், தன்னை தன் நண்பர்கள் தாலிபான் என அழைப்பார்கள் என நீதிபதியிடம் கூறியுள்ளான்.
ஸ்னாப்சாட்டில், ’நான் இந்த விமானத்தை வெடிக்கச் செய்யப்போகிறேன், நான் ஒரு தாலிபான்’ என அவன் பகிர்ந்த செய்திதான், போர் விமானங்களை அனுப்பும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதித்யாவுக்கு 100,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.