150 ஆண்டுகளுக்கு பின் நூலகத்தில் திரும்ப வழங்கப்பட்ட புத்தகம் - ரூ.18.7 லட்சம் அபராதம்
வழக்கமாக நூலகத்தில் அதன் உறுப்பினர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
புத்தகத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் திரும்ப வழங்க வேண்டும் என்ற விதி இருக்கும். தாமதமானால் மீண்டும் புத்தகத்தை வழங்கும் போது அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
அப்படியாக அவுஸ்திரேலியாவில் உள்ள நூலகம் ஒன்றில் 150 ஆண்டுகளுக்கு பின்னர் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளுக்கு நூலகத்தில் திரும்ப வழங்கப்பட்ட புத்தகம்
அவுஸ்திரேலியாவின் கியாமாவில் உள்ள பொது நூலகத்தில், 1858ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'ஏதென்ஸின் தொல்பொருட்கள்' (Antiquities of Athens) என்ற புத்தகம் கடந்த வாரம் திருப்பி வழங்கப்பட்டது.

வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது, மூடப்பட்ட நெருப்பிடம் ஒன்றில் செங்கற்களால் பதிக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தாக அதனை கண்டறிந்தவர் தெரிவித்துள்ளார்.
1872 ஆம் ஆண்டு அந்த நூலகம் திறக்கப்பட்டபோது இருந்த விதிப்படி, புத்தகத்தின் அட்டைக்குள் அச்சிடப்பட்டிருந்த வாரத்திற்கு 3 பென்ஸ் என்ற தாமதக் கட்டணத்தின் அடிப்படையில் இதற்கு 28,000 ஆஸ்திரேலிய டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18.7 லட்சம்) என அபராதம் கணக்கிடப்பட்டது.
ஆனால், எந்தப் புத்தகத்தை யார், எப்போது எடுத்தார்கள் என்பதைப் பதிவுசெய்திருந்த, 1870களின் நூலக இரவல் பதிவேடு தொலைந்துவிட்டதால், இந்த புத்தகத்தை யார் வாங்கி சென்றார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
நூலகத்தின் விதிகளின்படி, ஒருவர் மீண்டும் நூலகத்திலிருந்து புத்தகத்தை வாங்குவதற்கு முன்பு, ஏற்கனவே வாங்கிய புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் குறைந்தது 6 உறுப்பினர்களுக்கு படிக்கத் தெரிந்தால் மட்டுமே, அக்குடும்பம் அதிகபட்சம் 3 புத்தகங்களை மட்டுமே வாங்க முடியும்.
பல ஆண்டுகளாக புகைபோக்கிக்கு அடியில் இருந்ததால் அந்தப் புத்தகம் சிறிதளவு நீர் சேதம் அடைந்திருந்தது.
நூலகத்தின் சுமார் 1,000 புத்தகங்களைக் கொண்ட அசல் தொகுப்பில் 506-வது புத்தகமாகக் குறிக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தை மீண்டும் வெளியே செல்ல நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. இந்தப் புத்தகம் திரும்பக் கிடைப்பதற்காக மேலும் 150 ஆண்டுகள் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை என கியாமா நூலக மேலாளர் மிஷேல் ஹட்சன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |