பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் கவனத்திற்கு! ஐரோப்பிய மருத்துவ நிறுவனத்தின் எச்சரிக்கை
பூஸ்டர் டோஸ் (Booster) தடுப்பூசிகளை அடிக்கடி செலுத்திக்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளரான EMA எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் (European Medicines Agency) கூறுகையில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ்களை உடலில் செலுத்திக்கொள்வதனால், மக்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து, அவர்கள் அதிகமாக சோர்வடைய நேரிடும்.
அதற்கு பதில், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பூஸ்டர் தடுப்பூசிகளுக்கும் இடையில் அதிகமான கால இடைவெளியை விடவேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் Omicron வகை கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மக்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த சில நாடுகள் திட்டமிட்டு வருவதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், உலகிலேயே முதல் நாடாக இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் (நான்காவது டோஸ் தடுப்பூசி) டோஸை வழங்க தொடங்கியது.
இவ்வாறு வழங்கப்படும் பூஸ்டர்கள் மக்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதால், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் பிரித்தானியா கூறியுள்ளது.
இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசிகளை ஒருமுறை அல்லது இரண்டு முறை செலுத்தலாம், ஆனால் இவற்றை தொடர்ந்து செலுத்துவது கூடாது என உயிரியல் சுகாதார மற்றும் EMA தலைவரான மார்கோ கவலேரி (Marco Cavaleri) கூறியுள்ளார்.
"இப்போதுள்ள கடுமையான தொற்றுநோய் அமைப்பில் இருந்து இயல்பு நிலைக்கு எவ்வாறு மாறலாம் என்பதைப் பற்றிய சிந்தனை தான் நமது தற்போதைய தேவையாக இருக்கவேண்டும்" என்று அவர் கூறினார்.
Remdesivir மற்றும் Paxlovid போன்ற ஆன்டிவைரல்கள் Omicron-க்கு எதிராக நன்கு செயல்படுகின்றன என்று EMA கூறியுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் புதிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க முடியும், ஏனெனில் இவற்றை முறையாக செயல்படுத்த கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும் என்று EMA கூறியுள்ளது.