பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை தீவிரம்: இராணுவத்தைக் களமிறக்கும் போரிஸ் ஜான்சன்
பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரச்சினையைத் தீர்க்க இராணுவத்தைக் களமிறக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறையால் பெட்ரோல் முதலான பொருட்களைக் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் பெட்ரோல், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. எனவே, வெளிநாட்டு சாரதிகளுக்கு தற்காலிக விசா கொடுத்து அவர்களைக் கொண்டு ட்ரக்குகளை இயக்க போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால், அது உடனடியாக நடக்கும் ஒரு விடயம் இல்லை. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என பயந்து மக்கள் பெட்ரோலை வாங்கிக் குவித்த நிலையில், பெட்ரோல் நிலையங்கள் பலவற்றில் எரிபொருள் காலியாகிவிட்டது. மீண்டும் தங்கள் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப ஒரு வாரமாவது ஆகும் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொண்டு ட்ரக்குகளை இயக்கி பெட்ரோல் கொண்டு வர போரிஸ் ஜான்சன் அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் பற்றக்குறை அச்சம் நீடிக்கும் நிலையில், இராணுவத்தைக் களமிறக்குவது தொடர்பில் இந்த வாரம் அமைச்சர்கள் முடிவெடுக்க உள்ளனர்.
இதற்கிடையில், பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக இன்று அலுவலகத்துக்குச் செல்லும் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதால், இதர போக்குவரத்தில் குழப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.