பிளான் -B கட்டுப்பாடுகள்! உறுதி செய்த போரிஸ் ஜோன்சன்: சற்று முன் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று மாலை பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இப்போது உலகில் சுமார் 39-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக பிரித்தானியாவில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
தற்போது வரை ஒமைக்ரானால் மட்டும் 568 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை(6 மணி) சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், அவர் தற்போது இருக்கும் சூழ்நிலையில், பிளான்-பி நோக்கி நகருவதை உறுதி செய்தார்.
தொடர்ந்து கூறுகையில், பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
இதனால் மருத்துவமனைகளில் ஒருவராத்தில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இரட்டிப்பாகலாம். எனவே, இந்த வைரஸ் பரவலை தடுக்க நாம் Plan-B-ஐ நோக்கி நகர்கிறோம்.
இதன் காரணமாக வரும் திங்கட் கிழமை முதல் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துகிறோம்.
தேவைப்பட்டால் மட்டுமே வேலைக்கு செல்லுங்கள். முகக்கவசம் கட்டாயம் அணிவது பல இடங்களில் நீட்டிக்கப்படும், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது நீட்டிக்கப்படும்.
இரவு விடுதிகள் போன்ற ஏராளமான மக்கள் கூடும் இடங்களில், கோவிட் பாஸ் கட்டாயமாக்கப்படும். தனிமைப்படுத்துதலுக்கு பதிலாக, தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.