மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் ஆண்டுக்கு சுமார் 1,000 பவுண்டுகள் வரை ஈட்ட வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 8.91 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது 9.42 பவுண்டுகளாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த உயர்வால் குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு 5.7% ஊதிய உயர்வை காண்பார்கள்.
அதாவது, வாரத்திற்கு 35 மணி நேரம் வேலை பார்க்கும் ஒருவர் ஆண்டுக்கு 928 பவுண்டுகள் இனி கூடுதலாக பெறுவார். குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 10 பவுண்டுகள் என உறுதி செய்யப்படும் என்றே முன்னர் தகவல்கள் வெளியானது.
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வானது பெரும்பாலான பிரித்தானிய ஊழியர்களுக்கு பலனாக அமையும் என்றாலும், அவர்களின் வயதை கருத்தில் கொண்டு மாறுபடும் என்றே தெரிய வந்துள்ளது.
16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறைந்தபட்ச ஊதிய உயர்வால் பலன் உள்ளது. ஆனால் பகுதி நேர வேலை செய்தாலும் அமுலுக்கு வரவிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும்.
தற்போது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 8.91 பவுண்டுகள் அளிக்கப்படுகிறது, ஆனால் 21 அல்லது 22 வயதுடையவர்களுக்கு 8.36 பவுண்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 6.56 பவுண்டுகளும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4.62 பவுண்டுகளும் குறைந்தபட்ச ஊதியமாக தற்போது அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.