சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த களமிறங்கும் இராணுவம்... பார்ட்டி சர்ச்சையை திசை திருப்ப போரிஸ் ஜான்சன் நடவடிக்கை?
பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கையில் எடுக்க பிரித்தானிய பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செய்துவந்த உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலிடமிருந்து, அந்த பொறுப்புக்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வாங்கிக்கொள்ள இருக்கிறாராம்.
விடயம் என்னவென்றால், பொதுமுடக்கத்தின்போது மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தபோது, பிரதமர் இல்லத்தில் தொடர்ந்து மதுபான பார்ட்டிகள் நடத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே, தனக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை சரி செய்வதற்காக திட்டம் தீட்டி வருகிறார் போரிஸ்...
சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரீத்தி பட்டேலிடம் இருந்து தான் வாங்கிக்கொண்டு, அதன் மூலம் மக்களின் ஆதரவைத் திரும்பப் பெற முயல்வது அவற்றில் ஒன்று!
ஆக, 'Operation Red Meat' என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் போரிஸ் எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கை, சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த, இராணுவத்தைக் களமிறக்குவதாகும்.
அதன்படி, எல்லை பாதுகாப்புப் படைக்கு உதவுவதற்காக கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் களமிறக்கப்படுவதுடன், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது.
எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பிரான்சிலிருந்து வரும் சட்ட விரோத புலம்பெயர்வோர் படகுகளைத் தடுத்து நிறுத்த மறுக்கும் நிலையில், இராணுவ ஜெட் ஸ்கீ வாகனங்கள் புலம்பெயர்வோர் படகுகளை தடுத்து அவற்றை பிரான்சுக்கே திருப்பு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.