கைது செய்யப்படலாம்... தென் அமெரிக்க நாடொன்றிற்கு பயணப்பட அஞ்சும் விளாடிமிர் புடின்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைதாணை நிலுவையில் இருப்பதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்ப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக
ரஷ்ய வெளிவிவகாக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிராக முழு அளவிலான போரைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டில் ஐ.சி.சி இந்த கைதாணையைப் பிறப்பித்தது.
உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான சிறார்களை நாடு கடத்தி புடின் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளதுடன் ஐ.சி.சி.யின் ஸ்தாபக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ரஷ்யாவிற்கு எதிரான கைதாணை செல்லாது என்றும் நிராகரித்துள்ளது.
இருப்பினும், ஐ.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேறொரு நாட்டிற்குப் பயணம் செய்தால், அவர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தை புடின் உணர்ந்துள்ளார்.
மட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் செய்வதை அவர் மறுத்தார். ஆனால் மங்கோலியா ஐ.சி.சி உறுப்பு நாடாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டு அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசில் அரசாங்கத்தால்
தற்போதும் கைது நெருக்கடி இருப்பதால், ஜூலை 6-7 திகதிகளில் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புடின் காணொளி இணைப்பு மூலம் பங்கேற்பார் என்று உஷாகோவ் கூறினார்.
மேலும், கைதாணை குறித்து பிரேசில் அரசாங்கத்தால் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்பதாலையே, புடின் பயணத்தை ரத்து செய்துள்ளதாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உச்சிமாநாட்டிற்குப் பயணம் செய்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உச்சிமாநாட்டைத் தவிர்ப்பார் என்றும் சீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |