லண்டனைச் சேர்ந்த 25 வயது மாணவன் பணத்திற்காக செய்த செயல்! சினிமாவையே மிஞ்ச வைத்த சம்பவம்
லண்டனைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன் அப்பாவிடம் பணம் பெறுவதற்காக கடத்தல் நாடகமாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்தவர் Sam Demilecamps. 25 வயது மதிக்கத்தக்க இவர் இத்தாலிக்கு விடுமுறைக்காக சென்ற போது, அங்கிருக்கும் வடக்கு நகரமான Monte San Giusto-வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடத்தப்பட்டு எட்டு நாட்கள் சிறைபிடிக்கப்பட்டதாக கூறினார்.
அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து கடத்தல்காரர்களால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் இது ஒரு கடத்தல் நாடகம் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் திகதி Sam Demilecamps இத்தாலியில் கடத்தப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் 6000 பவுண்ட்கள் கேட்கப்பட்டுள்ளது.
அதன் பின் இத்தாலி பொலிசார் அந்த இளைஞனை ரேடியேட்டரில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்டனர். அப்போது குறித்த இளைஞன், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணால் தான் கடத்தப்பட்டதாகவும், சித்ரவதைக்கு உள்ளானதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து இந்த வழக்கு பிரித்தானியா பொலிசாருக்கு திரும்பியது. அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இது அந்த மாணவன் தன்னுடைய கடனை அடைப்பதற்காக, பெற்றோரிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக இப்படி ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து Brussels-ல் வசிக்கும் அவருடைய தந்தை Patrick Demilecamps கூறுகையில், நாங்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு முன்பே பேசுவதை நிறுத்திவிட்டோம். பொதுவாக எந்த ஒரு கடத்தல்காரர்களும், தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணையக்கைதிகளுக்கு மொபைல் போனை வைத்திருக்க அனுமதிக்கமாட்டார்கள்.
ஏனெனில் பொலிசார் போனை வைத்து டிராக் செய்ய முடியும் என்பது தெரியும். அதன் படி எனக்கு 6000 பவுண்ட் கேட்டு மிரட்டிய போது, உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்தேன். பொலிசார் அடுத்த 36 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த Beliga Gnaga(18), கினியாவைச் சேர்ந்த Dona Conte(22), மோரோக்கோவைச் சேர்ந்த Ahmed Rajraji(21) மற்றும் Montenegro-வைச் சேர்ந்த Aida Carpani(20) ஆகியோரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
இந்த நான்கு பேரும் இத்தாலியில் உள்ள Monte San Giusto வசித்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் இது ஒரு ஏமாற்றுவேலை, நாங்கள் அவருக்கு 7,000 யூரோ கடன் கொடுத்தோம், அதை எங்களுக்கு அனுப்பும் படி கேட்ட போது, இந்த கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டதாக கூறியுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது இவர்கள் வீட்டுக்காவலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.