ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா
ஈரான் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அங்கிருந்து தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அதிகப்படியான கோரிக்கை
ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம் என்ற தீவிர நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தங்களின் கொள்கைகளுக்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் என அமெரிக்கா அழுத்தமளித்து வருகிறது.

அத்துடன், ஈரானை கட்டுப்படுத்துவது, மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும் என்ற நோக்கமும் அமெரிக்கா தரப்பிற்கு உள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகளை முடக்கியுள்ள இஸ்ரேல் தற்போது தமக்கு சாதகமானக் கொள்கைகளை அமெரிக்கா ஊடாக ஈரானிடம் இருந்து சாதிக்க முயன்று வருகிறது.
இதனாலையே, பேச்சுவார்த்தைகளில் இதுவரை சாதகமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், பேச்சுவார்த்தைகள் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக நடப்பதாக இரு தரப்பிலும் கூறப்பட்டது.
ஆனால், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு, அமெரிக்கா தனது அதிகப்படியான கோரிக்கைகளை கைவிட வேண்டும் என ஜெனீவாவில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் என்ற முடிவுக்கு வந்துள்ள அமெரிக்கா, ஈரானின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறது. மேலும், இதுவரை இஸ்ரேல் கூறிவந்துள்ள குற்றச்சாட்டுகளையே தற்போது ட்ரம்பும் முன்வைத்துள்ளார்.
ஐரோப்பாவையும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை ஈரான் ஏற்கனவே உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அவர்கள் விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஈரான் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க மறுக்கிறது, அது ஒரு பெரிய பிரச்சனை என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது ஏவுகணைத் திட்டம் அதன் தற்காப்புத் திறன்களின் ஒரு பகுதி என்று பலமுறை கூறியுள்ளது, மேலும் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிடுவதை நிராகரித்துள்ளது, அதன் அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்துகிறது.
புதிய இராணுவ நடவடிக்கை
இதனையடுத்து எப்போது வேண்டுமானாலும், அமெரிக்கா தரப்பில் இருந்து தாக்குதல் முன்னெடுக்கலாம் என்ற நிலையில் ஈரானில் தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மேலும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை அவசர தேவைகள் அல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இஸ்ரேலை விட்டு வெளியேற அனுமதிப்பதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப், அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்காவிட்டால், புதிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானை பலமுறை அச்சுறுத்தியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜெனீவாவில் வியாழக்கிழமை அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன.
முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் பிளவுபட்டிருந்ததால், சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிவடைந்தன.
பிப்ரவரி 19 அன்று ட்ரம்ப் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்ட 15 நாட்கள் அவகாசம் அளித்தார், அதே நேரத்தில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் மட்டுமே விவாதங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |