மத்திய கிழக்கில் இருந்து முடங்கிய இறக்குமதி... இயற்கை எரிவாயு தட்டுப்பாடில் பிரித்தானியா
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் இரண்டு நாட்களுக்குத் தேவையான இயற்கை எரிவாயு மட்டுமே சேமிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1.5 நாட்களுக்கு மட்டுமே
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த வருடம் 18,000 GWh இயற்கை எரிவாயு சேமிப்பு இருந்ததை அடுத்து, தற்போது 6,700 GWh என சரிவடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

இது வெறும் 1.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என கூறுகின்றனர். இருப்பினும் இதே அளவு தற்போது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவாக தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், அவை பல வாரங்களுக்கு நீடிக்கும் இருப்புக்களை கைவசம் வைத்திருப்பதுடன், விநியோகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு தயாராகவும் உள்ளன.
இந்த நிலையில், நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பாவிலேயே எரிவாயுவுக்கான அதிக மொத்த விலையை பிரித்தானியா தற்போது செலுத்துகிறது.
பிரித்தானியாவில் பொதுவாக 12 நாட்களுக்கு தேவையான எரிவாயு சேமித்து வைக்கப்பட்டு இருக்கும், ஆனால் அடுத்தடுத்த அரசாங்க அமைச்சர்கள் அதற்கான நிதியை நிறுத்திய பிறகு அந்த நிலை சரிந்தது.
தேசிய எரிவாயு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரித்தானியா தனது பெரும்பாலான எரிவாயுவை நோர்வே மற்றும் அதன் சொந்த வட கடலில் இருந்து பெறுகிறது.

ஆனால், வட கடலில் உற்பத்தி கடுமையாகக் குறையத் தொடங்கியுள்ளதால், அதிகரித்து வரும் சேமிப்புப் பற்றாக்குறை குறித்து தேசிய எரிவாயு நிறுவனம் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்பியுள்ளது.
17 மடங்கு அதிகம்
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் வரத்தில் ஏற்படும் இடையூறுகளால் எண்ணெய் விலைகள் கணிசமாக உயரும் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.
மட்டுமின்றி, நீரிணை வழியாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு மேற்கத்திய எண்ணெய் கப்பலையும் ட்ரோன்களால் தாக்குவோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை சபதம் செய்துள்ளது.

இதனால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் இருபக்கமும் முடங்கியுள்ளன. இந்த நிலையில், மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தியில் தற்போதைய சரிவு, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் ரஷ்யாவின் உற்பத்தியில் ஏற்பட்ட உச்ச சரிவை விட 17 மடங்கு அதிகம் என Goldman Sachs வங்கி எச்சரித்துள்ளது.
தற்போது ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் எதிர்வினையாக எண்ணெய் விலை 200 டொலரைத் தொடலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |