மொத்த புலம்பெயர்தலுக்கும் சிக்கலை ஏற்படுத்த பிரித்தானியா திட்டம்?: வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி...
பிரித்தானிய அரசு, சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.
இப்போது மொத்த புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்தும் விதத்தில் பிரித்தானியா நடவடிக்கை ஒன்றை எடுக்க இருப்பதாக அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத புலம்பெயர்தலை மட்டுமல்ல, சட்டப்பூர்வ புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாக அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு நாடும், தன் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களைக் குறித்து மூன்று கேள்விகள் எழுப்பும்.
ஒன்று, அவரால் நம் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் நன்மை ஏற்படுமா?
இரண்டு, அவரால் நம் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுமா?
மூன்று, அவரால் நாட்டில் குற்றச்செயல்கள் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளதா?
இந்த கேள்விகளில் அந்த நாட்டுக்கு நன்மை என அந்நாடு முடிவு செய்தால் மட்டுமே புலம்பெயர்தலை அது அனுமதிக்கும். இது ஒரு பொதுவான விடயம்.
தற்போது, பிரித்தானிய அமைச்சர்களும் இந்த ரீதியில் யோசிக்கத் துவங்கியுள்ளார்கள், சற்று ஆழமாகவே!
அதாவது, இதுவரை சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்தே பேசிக்கொண்டிருந்த பிரித்தானியா, இப்போது சட்டப்படி நடக்கும் புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்த விரும்புகிறது.
இது குறித்து சமீபத்தில் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த புதிய உள்துறை செயலரான சுவெல்லா பிரேவர்மேன், புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ் அரசிலுள்ள மூத்த அமைச்சர்கள் அனைவருமே, புலம்பெயர்தலை குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, எக்கச்சக்கமான குறைவான திறன் கொண்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் வருகிறார்கள். அத்துடன், அதிக அளவில் சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள்.அவர்கள் வரும்போது, கூடவே, மிக அதிக அளவில் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களால் பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பயன் இல்லை என்கிறார் சுவெல்லா.
ஆக, மொத்த புலம்பெயர்தலுக்கும் ஆப்பு வைக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது. ஆனால், ஏற்கனவே பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கைகளில் மாற்றம் செய்வது, ஏற்கனவே திணறத்துவங்கிவிட்ட பொருளாதாரத்துக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தாதா?