பிரித்தானியாவை பிரான்ஸ் பழிக்குப்பழி வாங்கும்: எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ள முன்னாள் தூதர்
அவுஸ்திரேலியாவுடன் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு விடயத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக பிரான்ஸ் பிரித்தானியாவை பழிக்குப் பழிவாங்கும் என பிரான்சுக்கான முன்னாள் பிரித்தானிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரெக்சிட் விடயத்தால் பிரித்தானியா மீது கடும் எரிச்சலில் இருந்த பிரான்ஸ், தற்போது அவுஸ்திரேலியாவுடனான 90 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கைநழுவிப்போக பிரித்தானியாவும் ஒரு காரணமாக ஆகியுள்ளதால், கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.
நடந்தது என்னவென்றால், அவுஸ்திரேலியா, நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிப்பதற்காக 90 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்திருந்தது. ஆனால், திடீரென புதன்கிழமை காலை, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடமிருந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்திருக்கிறது.
குழப்பமடைந்த பிரான்ஸ், என்ன நடக்கிறது என்று கேட்பதற்காக அமெரிக்காவை அழைக்க, சிறிது நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்து அறிவித்திருக்கிறார்.
அதாவது, பிரான்சும் அவுஸ்திரேலியாவும் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பது தொடர்பாக செய்திருந்த ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்ய, அதற்கு பதிலாக அவுஸ்திரேலியாவுக்கு நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் உதவும் வகையில் புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வரும் பிரான்சால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஜீரணிக்க இயலவில்லை. ஆகவே, இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மூன்று நாடுகளையும் பிரான்ஸ் பழிவாங்க இருப்பதாக பிரான்ஸ் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்சுக்கான பிரித்தானியாவின் முன்னாள் தூதரான Lord Peter Ricketts, பிரான்ஸ் இந்த மூன்று நாடுகளுக்கும் எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரான்ஸ் தூதரக அலுவலர் ஒருவரும், பிரித்தானியா இந்த விடயத்தில் ஒரு சந்தர்ப்பவாதியாக துணைபோயிருக்கிறது என சாடியுள்ளதால், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.