நேபாள விமான விபத்து: கொல்லப்பட்ட 68 பேரில் பிரித்தானியர் ஒருவரும் சேர்ப்பு
நேபாள விமான விபத்தில் 68 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறந்தவர்களில் பிரித்தானியாவை சேர்ந்த ருவான் காலும் கிரைட்டனும் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேபாள விமான விபத்து
நேபாளத்தின் போக்ரா நகரில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16ம் திகதி) 5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் பறந்த விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏடிஆர் 72 விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவு ஆகிய இரண்டும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விமான விபத்தை நேரில் பார்த்த சாட்சியான கவுரவ் குருங் என்ற நபர், விமானம் தரையிறங்க முயற்சித்த போது, காற்றில் பயங்கரமாக சுழன்றதை கண்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானத்தின் மூக்கு பகுதி முதலில் இடது பக்கம் சரிந்ததாகவும், பின் பள்ளத்தாக்கில் விழுந்து விமானம் தீப்பிடித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியர் ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இமயமலை தேசமான நேபாளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும். இந்த விமான விபத்தில் நேபாளம், இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
AP
இவர்களுடன் முதலில் நேபாள அதிகாரிகளால் ஆரம்பத்தில் ருவான் காலும் கிரைட்டன் (Ruan Calum Crighton) அயர்லாந்து குடியரசைச் சேர்ந்தவர் என்று நம்பப்பட்டது, ஆனால் UK அரசாங்கம் அவர் பிரித்தானியர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் வழங்க தகவலில், நேபாளத்தில் உயிரிழந்த பிரித்தானிய நபரின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
Sky News