பிரித்தானிய தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: மகாராணியார் துபாய் அரசருக்கு தடை
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தைக் கொந்தளிக்கச் செய்ததையடுத்து, பிரித்தானிய மகாராணியார், துபாய் அரசர் தன்னுடன் குதிரைப் பந்தயத்தைக் காண்பதற்கு தடை விதித்துள்ளார்.
துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமுக்கும் அவரது மனைவி இளவரசி ஹயாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஹயா துபாயிலிருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார்.
இளவரசியின் பாதுகாவலர் Russell Flowers (37) என்பவருக்கும் தனது மனைவி ஹயாவுக்கும் தவறான உறவு இருப்பது தெரியவந்ததையடுத்து, ஷேக் மொஹ்மதுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், ஹயாவின் பிள்ளைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவு செய்வதற்காக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் முடிவில் பிள்ளைகள் ஹயாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நடத்தியவர் Fiona Shackleton என்ற சட்டத்தரணி. அவர், ராஜ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் சார்பில் ஆஜராகும் ஒரு சட்டத்தரணி. அத்துடன், அவர் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இந்நிலையில், ஷேக் மொஹ்மத் தன் மனைவி ஹயா மற்றும் அவரது சட்டத்தரணியான Fiona ஆகியோரின் தொலைபேசிகளை ஹேக் செய்துள்ளார். அவர்கள் தங்கள் மொபைல்களில் வைத்திருந்த மின்னஞ்சல்கள் முதல் புகைப்படங்கள் வரை இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் நீதிமன்றமே கண்டுபிடித்துள்ளது.
துபாய் மன்னர் ஷேக் மொஹ்மதும், அவரது மனைவி ஹயாவும் தனிப்பட்ட முறையில் பிரித்தானிய மகாராணியாரின் நீண்ட கால நண்பர்கள் ஆவர்.
ஆனால், ஷேக் மொஹ்மத் தொலைபேசிகளை ஹேக் செய்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளதால், பலரும் மகாராணியார் அவருடனான நட்பைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என கோபக்குரல் எழுப்பியுள்ளார்கள்.
பிரித்தானிய மகாராணியாரின் குடும்பம், இங்கிலாந்திலுள்ள Ascot என்ற இடத்தில் நடைபெறும் குதிரைப் பந்தயங்களை கண்டுகளிக்கும்போது, தங்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பகுதியில் துபாய் மன்னர் ஷேக் மொஹ்மதின் குடும்பத்தையும் அமரவைத்து அனைவருமாக குதிரைப்பந்தயத்தை ரசிப்பதுண்டு.
தற்போது ஷேக் மொஹ்மதின் மீது பிரித்தானிய தொலைபேசியை ஹேக் செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஷேக் மொஹ்மது தங்களுடன், ராஜ குடும்பத்துக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என மகாராணியார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.