பிரித்தானியாவை பதறவைத்த இளம்பெண் கொலை வழக்கு: பெண்கள் பாதுகாப்புக்காக அறிமுகமாகும் புதிய திட்டம்
பொலிசார் ஒருவரால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாரா எவரார்டு விவகாரம் பிரித்தானியாவைப் பதறவைத்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் ஒன்று பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாப்பதற்காக 888 என்னும் எண் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அந்த திட்டம் 'walk me home service' என்று அழைக்கப்படும். இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டால், அதில் உள்ளிடப்படும் வீட்டு விலாசம் முதலான தகவல்களின் அடிப்படையில், அது பயணிக்கும் பெண்ணின் பயணத்தை ட்ராக் செய்து, அவர் குறித்த நேரத்துக்கு வீடு சென்று சேரவில்லை என்றால், உடனடியாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை பொலிசாருக்கு அளிக்கும்.
அத்துடன், பெண்கள் தனியாக நடந்து செல்லும்போது தங்களுக்கு ஆபத்து என கருதினால், ஒரு பொத்தானை அழுத்தினால், அதுவும் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கும்.
இந்த திட்டத்தை தொலைதொடர்பு நிறுவனமான BT குழுமத்தின் தலைமை அதிகாரியான Philip Jansen முன்வைத்துள்ளார். அது தொடர்பாக அவர் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த திட்டம் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளார்.
பிரீத்தி பட்டேலும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளார்.
பொலிசாரான Wayne Couzens என்பவர், சாரா என்னும் இளம்பெண்ணை கடத்தி, வன்புணர்ந்து கொலை செய்ததைத் தொடர்ந்து, Mr Jansen இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.