ஈரானில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் பிரித்தானியர்கள்: குடும்பத்தினர் குற்றச்சாட்டு
ஈரானில் கைதாகியுள்ள ஒரு பிரித்தானியத் தம்பதியின் குடும்பத்தினர், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரின்போது அந்தத் தம்பதி மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மனிதக் கேடயங்களாக
அத்துடன், அவர்களின் விடுதலைக்காக பிரித்தானிய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு கடந்த ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களைத் தற்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும், தெஹ்ரானில் உள்ள எவின் சிறைக்கு அருகே ஏற்பட்ட குண்டு வீச்சில் கிரேக் ஃபோர்மேனின் வார்டில் இருந்த ஜன்னல் பலகைகள் உடைந்து சிதறியதாகவும், அவர்கள் தஞ்சம் புகுவதற்காகக் கட்டில்களுக்கு அடியில் பாய்ந்ததாகவும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, லிண்ட்சே ஃபோர்மேனின் மகன் தெரிவிக்கையில், அவர்கள் எலிகள் மற்றும் கரப்பான் பூக்களுடன், உலோகப் படுக்கைகளில், இடைவிடாத உடல் வலியுடன் உறங்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டு
உலகப் பயணத்தின் ஒரு பகுதியாக ஈரான் வழியாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்தத் தம்பதி ஜனவரி 2025-இல் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்தன.

இந்த நிலையில், பென்னட் தனது பெற்றோரின் விடுதலையைப் பெற்றுத்தர பிரித்தானிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே, இந்த மாதம் வாஷிங்டனில் தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்து நடைபெற்ற ஒரு மாநாட்டில், தனது பெற்றோர் கைவிடப்பட்டதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
ஃபோர்மேன்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது என்று கண்டித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், அவர்களை விடுவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |