பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இறுகும் நெருக்கடி... நம்பிக்கை இழந்த மக்கள்
பிரதமர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரித்தானிய மக்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அவரது கன்சர்வேட்டிவ் கட்சி வாக்காளர்களில் மூன்றில் ஒருபங்கு மக்களும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அவர் பதவி விலகுவதே உரிய முடிவாக இருக்கும் எனவும் குறித்த கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறும் கிறிஸ்துமஸ் விருந்து தொடர்பில் கசிந்த காணிளி காட்சி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு என மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விருந்தில் பிரதமர் கலந்து கோண்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், பிரதமர் ஜோன்சன் அதை மறுத்து வருகிறார். பொதுமக்களில் 54% பேர்கள் பிரதமர் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, 76% மக்கள் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவு செய்துள்ளனர். 30% மக்கள் மட்டுமே பிரதமர் ஜோன்சனுக்கு ஆதரவாக, அவர் பதவி விலகத் தேவையில்லை என வாக்களித்துள்ளனர்.
கசிந்த அந்த காணொளி தொடர்பில் பிரதமர் ஜோன்சன் மன்னிப்பு கோரியிருந்தாலும், மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவே தெரிய வந்துள்ளது. இதனிடையே பிரதமர் ஜோன்சன் கண்டிப்பாக மக்களிடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொழிலாளர்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் ஜோன்சன் இந்த விவகாரத்தில் களங்கமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என்று ஸ்கொட்லாந்தின் முதல்வர் Nicola Sturgeon வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், சொந்த கட்சியில் இருந்தே பிரதமர் ஜோன்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தவறான தகவலை பிரதமர் ஜோன்சன் பதிவு செய்துள்ளது நிரூபணமானால், அவர் பதவி துறப்பதை தவிர வேறு வழியில்லை என ஸ்கொட்லாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் Douglas Ross தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தேசிய ஊரடங்கு வேளையில், பிரதமர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது மறுக்க முடியாத உண்மை என்றே Douglas Ross காட்டமாக தெரிவித்துள்ளார்.
சொந்த கட்சியினரே கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தும், அவ்வாறான விருந்தொன்று நடைபெறவில்லை என்றே பிரதமர் ஜோன்சன் சாதித்து வருகிறார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்குமாறு அமைச்சரவை செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.