பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூடும் நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மன்னர் சார்லசிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்துடன் அந்த குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை புதுப்பித்து, அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது.
மன்னர் சார்லசுக்கு கோரிக்கை
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகமான வீராஸ்வாமி உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதற்கு, விருந்தோம்பல் துறையில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஆகவே, உணவகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தும் புகார் மனு ஒன்றில் 20,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

வீராஸ்வாமி உணவகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினர் தற்போது அந்த புகார் மனுவை பக்கிங்காம் அரண்மனைக்குக் கொண்டு சென்றுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

மன்னருக்கும், Crown Estateக்கும் அந்த புகார் மனுவின் நகல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.
அந்த மனுவில், வீராஸ்வாமி உணவகத்தின் இணை உரிமையாளரான ரஞ்சித் (Ranjit Mathrani), 100 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியம் மிக்க அந்த உணவகத்தைக் காப்பாற்றுமாறு மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஞ்சித்தின் மனைவியான நமீதா (Namita Panjabi), வீராஸ்வாமி உணவகம் குறித்து பேசும்போது, வீராஸ்வாமி உணவகம், மறைந்த எலிசபெத் மகாராணியாருக்கு, பக்கிங்காம் அரண்மனையில் இரண்டு முறை உணவு பரிமாறியுள்ளது.
2009ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி பக்கிங்காம் அரண்மனைக்கு வருகைபுரிந்தபோதும், 2017ஆம் ஆண்டு இந்தியா தனது 70ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோதும் எலிசபெத் மகாராணியாருக்கு வீராஸ்வாமி உணவகம் உணவு பரிமாறியுள்ளது.
இந்நிலையில், அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க உணவகத்தை மூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |