ட்ரம்ப் அச்சுறுத்தலால் கனடா-அமெரிக்கா கூட்டு பாலம் திறப்பு விழா ரத்து
கனடா அரசு, அமெரிக்காவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டிருந்த Gordie Howe சர்வதேச பாலம் திறப்பு விழாவை திடீரென ரத்து செய்துள்ளது.
இந்த முடிவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரி நடவடிக்கை காரணமாக எடுக்கப்பட்டது.
டெட்ராய்ட் (மிச்சிகன்) மற்றும் விண்ட்சர் (ஒன்ராறியோ) நகரங்களை இணைக்கும் இந்த பாலம், ஜூலை 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் இரு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ரிப்பன் வெட்டும் விழா திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்க உள்ளதாக அறிவித்ததால், கனடா அரசு தனியாகவே விழாவை நடத்த முடிவு செய்துள்ளது.

கனடா உள்கட்டமைப்பு அமைச்சர் கிரேகர் ராபர்ட்சனின் செய்தித்தொடர்பாளர், இத்தகைய சூழலில் இரு நாடுகளும் சேர்ந்து கொண்டாடுவது பொருத்தமல்ல என்று தெரிவித்தார்.
கனடா, ஜூலை 24 அன்று தனிப்பட்ட விழாவை நடத்தி, ஊடகங்களை அழைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வரி நடவடிக்கை, 1930-ஆம் ஆண்டு Tariff Act-இன் அரிதாக பயன்படுத்தப்படும் Section 338 சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது. அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) புதுப்பிக்கப்படாததால், வர்த்தக உறவுகள் மேலும் குழப்பத்தில் உள்ளன.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி, “இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால், எவ்வாறு பதிலளிப்பது என்பதை ஆராய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், பாலம் கட்டுமான செலவுகள், உரிமை, மற்றும் கட்டண வசூல் தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையே பல மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இந்த பாலம், 2018-இல் தொடங்கப்பட்டு, 4 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் ட்ரம்ப், இந்த பாலம் இரு நாடுகளுக்கும் முக்கிய பொருளாதார இணைப்பாக இருக்கும் என்று பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது, வர்த்தக மோதல்கள் காரணமாக, இந்த பாலம் திறப்பு விழா இரு நாடுகளின் உறவுகளில் புதிய பிளவை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |